Wednesday, March 18, 2009

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 11.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9, பாகம் 10

பணமா?

ஆசிரியர்: அடுத்து ஒரு கேள்வி. நான் கேட்கிறேன் என்பதற்காக யாரும் சொல்ல வேண்டாம். விஞ்ஞானபூர்வமான உண்மையை மக்களுக்குக் காட்டணும்கிறதற்காக கேக்கறேன். எப்படி ஆப்பரேஷன் தியேட்டரில் போய் நிர்வாணமாக சிகிச்சை செய்யறமோ அதுமாதிரி உண்மையை தெரிஞ்சுக்கிறதுக்காக கேட்கிறேன். யாரும் தப்பா நினைக்க வேண்டாம். மதம் மாறுவதற்கு இங்கே யாராவது ஒருத்தராவது பணம் வாங்கியிருக்கிறாங்களா?

ஒவ்வொருவர் சம்மதத்தோடும்....

(உமரும் கூட இருப்பவர்களும் ஒட்டு மொத்தமாக இல்லை என்று சொல்கிறார்கள்)

உமர்: நாங்க யாரும் பணம் வாங்கவும் இல்லை. கொடுக்கவும் இல்லை. மதம் மாறணும்கிற எண்ணம் வந்த பிறகு நாங்க ஒவ்வொரு வீடா போயி கேட்டோம் - கேட்ட பிறகு ஒட்டு மொத்தமா மதம் மாறணும்கிற முடிவுக்கு வந்து ஒரு பேப்பர்ல எழுதினோம். நாங்க யாருடைய தூண்டுதலும் இல்லாம நாங்களா மனமுவந்து இந்து மதத்திலிருந்தும் இந்து மதத்திலிருக்கிற 'பள்ளர்' என்ற பிரிவிலிருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறோம் என்று ஒவ்வொருவரிடமும் கையெழுத்து வாங்கித் தான் செய்தோம். இந்தப் புரளியெல்லாம் கிளப்பி விட்டது, இங்கே ஆர்.எஸ்.எஸ். ஒரு அய்யன் முளைச்சிருகிறான்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்

ஆசிரியர்: அவரு பேரு என்னங்க?

உமர்: அனந்தராமசேஷன்னு ஒரு அய்யன். அவரு தான் எல்லா புரளியும் கிளப்பி விடுகிறார். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தைப் போட்டு ஒருத்தரோடொருத்தர் சண்டையைக் கூட்டறதே அந்த ஆள்தாங்க. ஊரை அடிச்சு போட்டுருவோம்னு மிரட்டறதும் அந்த ஆள்தாங்க.

ஆசிரியர்: அவங்க வேலையே அது தானே. பிரிட்டிஷ் காலத்திலருந்து நாம பார்த்துக்கிட்டு தானே வர்றோம்.

உமர்: அவங்க பாலிசியே 'பிரிட்டிஷ் பாலிசிதானே.

இறைவன் நாடினால் வளரும்....

Wednesday, September 03, 2008

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 10.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8, பாகம் 9

இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?

ஆசிரியர்: சரி இந்து மதத்தில் கொடுமையிருக்கிறதினாலே மதம் மாறினீர்கள். எத்தனையோ மதங்கள் இருக்க ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறினீர்கள்?

உமர்: இந்து மதத்தை விட்டா கிறிஸ்தவ மதம் இருக்கிறது. நாங்கள்லாம் இஸ்லாம் மதத்துக்கு மாறனும்கிறதுக்கு முன்னாடி ஒரு 50 குடும்பங்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்.

கிறிஸ்தவ மதம் மாறினால்....

ஆசிரியர்: எத்தனை வருஷத்திற்கு முன்பு?

உமர்: சுமார் 20 வருஷத்திற்கு முன்னாடி, அங்க தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனாக இருக்கிறானே தவிர தாழ்த்தப்பட்டவன் நாடார் கிறிஸ்தவனுக்கு பெண் கொடுப்பதே நாடார் கிறிஸ்தவன். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவனுக்குப் பெண் கொடுப்பதோ இல்லை. அங்க சாதி அப்படியே இருக்கிறது. ஆனால் இஸ்லாம் மதம் அப்படி இல்லை. யார் ஒருவன் அல்லாவைத் தொழுகிறானோ அவன் எல்லாமே முஸ்லிம் தான். அங்க தீண்டாதவன் என்ற வித்தியாசம் கிடையாது.

இறைவன் நாடினால் வளரும்....

Sunday, June 22, 2008

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 9.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8

உமர்: அவரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தோட போனாரே தவிர எங்களை வந்து சந்திக்கல. மதம் மாறாதவர்களைக் கூட போய்ச் சந்திக்கல. ஒரு கூட்டத்தைப் போட்டாங்க! இஸ்லாம் மதத்தைப் பத்தி தாக்கித் தாக்கி பேசினாங்க.

'மதம் மாறாதே' 'மதம் மாறாதே'!

'அரபு நாட்டுப் பணத்துக்கு அடிமையாகாதே'

அப்படீன்னு இன்னும் மோசமான வார்த்தைகளால திட்டினாங்க. அப்புறம் முடிச்சுட்டு போயிட்டாங்க.

ஆசிரியர்: மற்றவங்க யாரும் சந்திக்கலயா?

உமர்: வாஜ்பேயை நாங்களா போய் சந்திச்சோம். "இந்த மதக் கொடுமையினால் தான் நாங்க மதம் மாறினோம். இருக்கிறவங்களுக்காவது கொடுமையில்லாம நடத்துவீங்களான்னு? கேட்டோம்.

ஆசிரியர்: அதுக்கு என்ன சொன்னாரு?

உமர்: அவரு உடனே பேச்சை முடிச்சிக்கிட்டு போயிட்டாரு. போயி அங்க என்ன சொல்லி விட்டாருன்னா, "இஸ்லாம் மதத்துக்கு போனவங்கள்லாம் தாய் மதத்துக்குத் திரும்பப் போறாங்கன்னு" சொல்லிட்டுப் போயிட்டார்.

இஸ்லாம் மதத்துக்கு மாறியது ஏன்?

இறைவன் நாடினால் வளரும்....

Tuesday, December 25, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 8.

முன்னுரை, பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 பாகம் 5, பாகம் 6, பாகம் 7


உமர்: நாங்க எந்தப் பெரியவங்களையும் அணுகவில்லை; எல்லாம் இளைஞர்கள் தான். ஆனா எங்க ஊர் பெரியவங்களும் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: இங்கு மொத்தம் எத்தனை குடும்பங்கள் மதம் மாறியிருக்கு?

உமர்: மொத்தம் 300 குடும்பத்தில் 210 குடும்பங்கள் மதம் மாறியிருக்காங்க.

ஆசிரியர்: ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேர்?

உமர்: சராசரி 5 பேரு.

ஆசிரியர்: அப்ப ஒரு ஆயிரம் பேர் இருக்கும்.

உமர்: ஆமாம்!

முக்கியமானவரை மறப்பதா?

ஆசிரியர்: இப்ப சாதாரணமா தீண்டாமையினால தொந்தரவு, சுயமரியாதையில்லாம நடத்தப்படுவது, நமக்கு படிச்சும் கவுரவம் இல்லை இது மாதிரி தொந்தரவு இருக்குது.

இந்து மதத்தில் தீண்டாமையெல்லாம் அனுசரிக்கிறது இல்லைன்னு சங்கராச்சாரி சொல்றாரே?. மதாச்சாரியார்கள் அப்படி சொல்லியும் நடைமுறையில் இங்க இருக்கறவங்க கடைபிடிக்கறதில்லையேன்னாலும் - நமக்கு சங்கராச்சாரி தானே முக்கியம்! அவுங்கள விட்டுட்டு எப்படி போறதுன்னு நீங்க நினைக்கலியா?

உமர்: இந்து மதம்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யுது; இல்லேன்னு சொல்லல. இங்கே தாழ்த்தப்பட்டவங்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. தாழ்த்தப்பட்டவன் இந்துவா இருக்கிறதில அர்த்தமேயில்லை.

ஏன்னா, அவங்க சாதி இந்துன்னு வைச்சுக்கிறாங்களே தவிர அரிஜன் என்பதை அப்படியே தான் வைச்சிருக்காங்க. அதை மாத்தலியே.

அவங்க அன்னைலேயிருந்து இன்னைய வரைக்கும் ஒரு அரிஜனை இந்துவா ஏத்துகிறதில்ல.

ஆக முடியாது

இவன் தான் அவங்களோட போயிடுறானே தவிர இவனை அவுங்க ஒத்துக்கறதில்ல. இங்கே கலவரம் நடக்குதுன்னா சாதி இந்துக்களுக்கும் அரிஜனனுக்கும் தான் சண்டைன்னு சொல்றானே தவிர இந்துக்கும் இந்துக்கும் சண்டேன்னு சொல்றதில்ல. அப்படியிருக்கும் போது எப்படி அரிஜன் இந்து ஆக முடியும்?

ஆசிரியர்: சமஸ்கிருதத்தில் சாதி இந்துக்களுக்கு வர்ணஸ்தர்கள் மற்றவர்களுக்கு ஈழவர்களையும் சேர்த்து அவர்ணஸ்தர்கள் என்று சொல்கிறார்கள். அந்த அவர்ணஸ்தர்களுக்கும் கீழே எல்லோருக்கும் கீழே கடைசியாக தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலை வைத்துள்ளனர்.

இப்ப சங்கராச்சாரியார் துக்ளக் பேட்டி மற்ற செய்திகளை எல்லாம் பார்த்து விட்டு தலைவர்கள்லாம் வந்தாங்களே, உங்களை வந்து பாக்கலியா?

உமர்: சந்திக்கலிங்க.

ஆசிரியர்: வாஜ்பேயி எல்லாம் வந்தாரே, வந்து பாக்கலியா? நியாயமாக உங்கள தானே வந்து சந்திக்க வேண்டும்?

இறைவன் நாடினால் வளரும்.

Saturday, June 09, 2007

மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்? - 7.


இப்போது ஏன் இந்த முடிவு?

ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

உமர்:
நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.
ஏது மரியாதை?

ஆசிரியர்: நீங்க பி.ஏ., வரைக்கும் படிச்சிருக்கீங்களே அதுக்காகவாவது கிராமத்தில் மரியாதை காட்டமாட்டார்களா?

உமர்: எங்கே காட்டுறங்க? இல்லையே!

ஆசிரியர்: உங்க சாதியாரைத் தவிர, பிற சாதியார் மரியாதை காட்டறாங்களா?

உமர்:
எங்க காட்டறாங்க?. வெள்ள வேட்டி, வெள்ள சட்டை மோட்டுகிட்டு போனாலே, அதோ போறான் பாரு வெள்ள வேட்டி கட்டிக்கிட்டு, படிச்சுப்புட்டானாம் அப்படீன்னு கிண்டல் செய்றாங்க. டிபார்ட்மெண்டில கூட படிச்சாலும் பட்டம் பெற்றாலும் துவேஷம் தான் பண்றாங்க.
ஆசிரியர்: இங்க பொருளாதாரத்தில் எப்படி? தொழில் முறை என்ன?

உமர்: இங்க பெரும்பாலும் விவசாயம் பண்றாங்க; எல்லாருக்குமே சொந்ததைடங்கள் இருக்கு.

ஆசிரியர்: நீங்க யாராவது தினக் கூலிகளாக இருக்கீங்களா?

உமர்: தினக்கூலிகளும் பத்து இருபது பேர் இருக்காங்க. அவங்கலும் மதம் மாறியிருக்காங்க.

துவேஷமே காரணம்

ஆசிரியர்:
மற்ற கிராமத்திலே இருக்கிற தாழ்த்தப்பட்டவங்களை விட, குறிப்பா திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிறவங்க படிப்புத்துறையில் முன்னேறுனவங்க பொருளாதாரரீதியில் - எடுத்துக்கிட்டாலும் மற்றவங்களைவிட நல்ல நிலையில் இருக்கிறீங்க. அப்படி இருந்தும் உங்களுக்கு இந்த எண்ணம் தோண வேண்டிய அவசியமென்ன?
உமர்:
துவேஷம் தான் காரணம். மனித உரிமை தான் வேண்டும். படிப்பு பரவப்பரவ மக்களுக்கு பகுத்தறிவு உண்டாகுது. அப்போது இதுல இருக்கிறதனால என்ன நன்மைன்னு சிந்திக்கிறாங்க. நம்மை மனுசனா மதிக்காத சாதியில ஏன் இருக்கணும்? நம்மை மதிக்கிற மதத்துக்கு போயிடலாமேன்னு நினைக்கிறாங்க.
ஆசிரியர்: நீங்க பெரியார் கூட்டங்களையெல்லாம் கேட்டிருக்கீங்கள்ள, அந்தக் கொள்கையில் நம்பிக்கை உண்டா?

உமர்: ஆமா!

ஆசிரியர்:
இருந்தாலும் நீங்க இளைஞர்கள், உங்க சமுதாயத்தில் இருக்கிற பெரியவங்க என்ன நினைக்கிறாங்க? அவங்க மதம் மாற ஆதரவா இருந்தாங்களா?
இறைவன் நாடினால் வளரும்.